(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 25 பிற்பகல் 12.30) சந்தேகநபர்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கு, கடற்படையினரின் கொலை கும்பலால் 11 மாணவர்களை கப்பம் பெறும் நோக்கில் கடத்தி கொலை செய்த வழக்கு உள்ளிட்ட 11 வழக்கு விசாரணைகள் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை இடை நிறுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன சட்டமா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக லங்கா ஈ நியூஸ் உள்ளக சேவைக்கு தகவல் வந்துள்ளது.
மேற்கூறிய இரண்டு வழக்குகளுடன் இலங்கை மின்சார சபையின் ஓய்வூதிய நிதியம் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் ஆகியவற்றில் 475 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்த சானுக்க ரத்வத்த போன்றவர்களுக்கு எதிரான ஆரம்பகட்ட விசாரணை மற்றும் விமல் வீரவன்ச மற்றும் அவரது மனைவி சசி வீரவன்ச ஆகியோரின் கடவுச்சீட்டு மோசடி வழக்கு உள்ளிட்ட 11 வழக்கு விசாரணைகளும் கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போது இடம்பெற்ற மோசடிகள் ஆகும்.
பதில் பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன என்பவர் இந்த வழக்குகளை சீ3 என்ற வழக்கு விசாரணைகளை நிறுத்தி வைக்கும் முறைமையின் கீழ் விசாரணைகளை நிறுத்தி வைக்குமாறு சட்டமா அதிபரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். இதற்கான காரணமாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த வழக்கு விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் அரசியல் அழுத்தங்கள் காரணமாக தாக்கல் செய்யப்பட்டவை என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடன் வழக்கு தொடர்பான விசாரணைகள் முறையாக இடம்பெறவில்லை எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டமா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
எனினும் பதில் பொலிஸ் மா அதிபரின் கோரிக்கை சட்ட விரோதமானது என சிரேஷ்ட சட்ட வல்லுனர்கள் பலர் தெரிவித்துள்ளனர். காரணம் சி3 முறைமையின் கீழ் வழக்கு விசாரணைகளை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றுக்கு கோரிக்கை முன்வைக்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு மாத்திரமே இருப்பதாக சிரேஷ்ட சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். எனவே சட்டமா அதிபரை அவ்வாறு நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைக்குமாறு கோருவதற்கு பொலிஸ்மா அதிபருக்கு அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சில வழக்குகள் விசாரணை முடிவடைந்து சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்றச்சாட்டின் கீழ் பதில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சிரேஷ்ட சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பதில் பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன கூறும் தகவலும் பொய்யானதாகும். காரணம் வசீம் தாஜுதீன் கொலை வழக்கு மற்றும் 11 மாணவர்கள் கொலை வழக்கு போன்றவை மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பொலிஸ் மா அதிபராக இருந்த என் கே இலங்ககோனினால் ஆரம்பிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலையுடன் தொடர்புடைய நபர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக அவர்களை சட்டத்திலிருந்து காப்பாற்றுவதன் நோக்கமாக பதில் பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன முன்னெடுக்கும் செயற்பாடுகள் எந்த அளவு பாரிய குற்றச்செயல் எனவும் பாவச் செயல் எனவும் தெரிந்து கொள்ள பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டவல்லுனர்கள் கீழ் காணும் காணொளியை பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடத்தப்பட்ட 11 மாணவர்களில் ஒருவர் இராணுவ வீரரின் மகனாவார். இராணுவ வீரர்கள் குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கும் நபர்கள் இந்த வீடியோவை பார்த்துவிட்டு என்ன கூறப் போகிறார்கள்?
வீடியோவை கீழே காணவும்.. வீடியோ அனுசரணை - The life Traveler குழு
---------------------------
by (2020-02-25 06:45:46)
Leave a Reply