-சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட் , 24 பிற்பகல் 3.45 ) இலங்கையில் கொரோனா கொடிய தொற்றுக்கு பலியான நபர்களில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் ஒருவராக 24ம் திகதி காலையில் இணைந்து கொண்டார். அவர் சுமார் ஒரு வார காலத்திற்கு மேலாக லங்கா ஹொஸ்பிடலில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார். உயிரிழக்கும் போது மங்கள சமரவீரவிற்கு 65 வயது.
ஆடை வடிவமைப்பு தொடர்பில் லண்டனில் பட்டம் பெற்ற மங்கள சமரவீர கல்வியை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பிய பின் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். சந்திரிக்கா குமாரதுங்கவின் நெருங்கிய நபரான அவர் சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பல அமைச்சுப் பதவிகளை வகித்தார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது மங்கள சமரவீர அவரது ' பிரச்சார முகாமையாளர்' பதவியில் இருந்தார். ராஜபக்ஷ வைரஸை நாட்டில் பரவவிட்ட அதிக பங்கு மங்களவிற்கு இருந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வெற்றி பெற்ற பின் மங்கள சமரவீர எதிர்பார்த்த பிரதமர் பதவி அவருக்கு கிடைக்கவில்லை. மாறாக துறைமுக அமைச்சு பதவி கிடைத்தது. பின்னர் மஹிந்தவின் அரசாங்கத்தில் இருந்தும் அமைச்சு பதவியில் இருந்தும் விலகிய மங்கள சமரவீர எதிர்கட்சியில் இணைந்து கொண்டார். 2015 ம் ஆண்டு கரு ஜயசூரிய ஜனாதிபதித் தேர்தல் பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட இருந்ததை தடை செய்து மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிவிக்க மங்கள சமரவீர பெரிதும் துணை நின்றார். ஆனால் மங்கள கூறியது போன்று மைத்திரியுடன் 35 பேர் எதிர்கட்சிக்கு வரவில்லை.
மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் மங்கள சமரவீர ஊடகத்துறை, நிதித்துறை, வௌிவிவகாரத்துறை அமைச்சுப் பதவி வகித்தார். மங்கள சமரவீர ஊடக சுதந்திரம் குறித்து அடிக்கடி குரல் எழுப்பிய போதும் லங்கா ஈ நியூஸ் இன்று அனுபவிக்கும் ஊடகத் தடை மங்கள சமரவீர ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் விதிக்கப்பட்ட ஒன்றாகும். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டு, ஊடக நிறுவனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு மேற்கொண்ட அநியாயங்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தி நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் ஊடகத்துறை மற்றும் நிதி அமைச்சை தன் வசம் வைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஊடக நிறுவனங்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க நிவாரணம் வழங்க மங்கள துளியளவும் செயற்படவில்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களத்திற்கு கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயற்பட்டவரும் மங்கள சமரவீர ஆவார். அதனால் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபட்டது. அந்த பிளவு ராஜபக்ஷக்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வாய்ப்பாக அமைந்தது. இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனது தோல்வியை தெரிந்து கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் போட்டியில் இருந்து மங்கள விலகினார்.
சிறுது காலம் அமைதியாக இருந்த மங்கள கடந்த ஜூலை 25 ம் திகதி 'பிரீடம் ஹப் ' என்ற பெயரில் அலுவலகம் ஒன்றை திறந்தார். அதன்பின் 'தூய தேசப்பற்றாளர்கள்' என்ற அமைப்பை உருவாக்கி களத்திற்கு மீண்டும் வந்தார். அவர் இறுதியாக நடத்திய ஊடக சந்திப்பும் பலரை சந்தித்த இடமும் அதுவாக இருந்தது. அவர் அன்றைய தினமே அவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இலங்கையில் உயர் தரத்தில் பிரதான நான்கு பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் மாகாண மட்டத்தில் அதிக புள்ளிகள் பெறும் 9 மாணவர்களுமாக மொத்தம் 14 மாணவர்களுக்கு ஹாவாட், ஒக்ஸ்போட், எம்ஐடி போன்ற உலகின் முதல் தர பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் சந்தர்ப்பத்தை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்க மங்கள சமரவீர நிதி அமைச்சராக இருந்த போது வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைத்ததை வரவேற்க வேண்டிய அதே நிலையில் அவரால் அதனை செய்து காட்ட முடியாது போய்விட்டது. எனினும் அவர் சிறிசேன அரசாங்கத்தில் வௌிவிவகார அமைச்சராக இருந்து நாட்டு பல சேவைகளை செய்துள்ளார்.
மங்கள சமரவீர நிரந்தர கொள்கையில் இருந்து செயற்பட்டவர் அல்ல. ஒரு கட்டத்தில் வௌ்ளை தாமரையை கையில் ஏந்தி சமாதான திட்டத்தில் இறங்கிய அவர் நாட்டில் யுத்தம் செய்வதற்கு உந்துதலாகவும் செயற்பட்டார். ஒரு தடவை ' ரணிலுக்கு முடியாது ' என்று கூறிய மங்கள, பின்னர் ' ரணிலுக்கு முடியும் என்பதால் தான் முடியாது ' என்று கூறியதாக வார்த்தை மாறினார்.
லங்கா ஈ நியூஸின் இந்த எழுத்தாளர் ' மங்கள அரசரான காலம் முடிந்தது ' என எழுதி இருந்தார். அதன் பின் மங்களவும் தான் யாரையும் அரசராக்கப் போவதில்லை என்று கூறியிருந்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கக் கூடிய நம்பிக்கையானவர் தனக்கு தானே என்று கூறிய மங்கள அடுத்து ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக வேண்டும் என்ற விருப்பத்தை வௌிக்காட்டினார். அவர் அண்மையில் ' தூய தேசப்பற்றாளர்கள் ' என்ற அமைப்பை உருவாக்கியதன் நோக்கமும் அதற்கானதாக இருந்திருக்கலாம். ஆனால் அவருக்கு அந்த பயணத்தை செல்ல கொரோனா இடமளிக்கவில்லை.
ஆனாலும் இலங்கை அரசியலில் மெதமுலன ராஜபக்ஷக்களை விட மங்கள முற்போக்கான அரசியல்வாதி. மங்கள பின்சிறி சமரவீர என்ற நபர் இலங்கை அரசியல் களத்தில் விசித்திரத்தை ஏற்படுத்தியவர். கொரோனா வைரஸிற்கு உலகில் பலியான நான்கரை மில்லியன் மக்களில் ஒருவராக மங்கள இருந்திருக்கக் கூடாது. காரணம் அப்படி நடந்திருந்தார், இந்த கட்டுரையை வாசித்துவிட்டு ' நான் உங்களது கட்டுரைக்கு இப்போது பதில் அளிக்க மாட்டேன். ஒருநாள் புத்தகம் எழுதுவேன் இந்த அனைத்திற்கும் பதில் கொடுத்து.' என்று தொலைபேசியில் அழைத்து கூறி சிரித்திருப்பார். அவர் அப்படி முன்னர் கூறியுள்ளார். மங்களவிற்கு அந்த புத்தகத்தை எழுத முடியாமல் போனது கவலை அளிக்கிறது.
( மங்கள இறுதியாக ஊடகங்களுக்கு வௌியிட்ட புகைப்படம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது )
---------------------------
by (2021-08-25 20:59:17)
Leave a Reply