- எழுதுவது சந்திரபிரதீப்
( லங்கா - ஈ - நியூஸ் - மார்ச் 31 , 2022 , பி.ப. 11 : 40 ) இந்திய வெளி விவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்கும் இலங்கை ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்ட முக்கிஸ்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின் இரு நாடுகளுக்கும் இடையில் முக்கியமான ஆறு இந்திய - இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் இலங்கை பிரத்தியேக டிஜிட்டல் அடையாள முறைமையை ( SL-UDI - Unique Digital Identity programme ) அமுல்படுத்துவது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை.
2. கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கான ( Maritime Rescue Coordination Center ) புரிந்துணர்வு உடன்படிக்கை. ( இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்த மையம் திருகோணமலையில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் அமைக்கப்படும், மேலும் இலங்கையின் கடல் மற்றும் வான் பாதுகாப்பு விடயங்களை இந்தியாவுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதற்கு வசதியாக இலங்கை வான் பரப்பைப் பயன்படுத்தி மூன்று இந்திய ஆள் இல்லா விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும் )
3. யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளில் கலப்பு மின்சக்தி திட்டங்களை ( Hybrid Power Projects ) அமுல்படுத்துவது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை.
4. இலங்கையில் மீன்பிடித் துறைமுகங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை. ( இந்த ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையின் அனைத்து மீன்பிடி துறைமுகங்களுக்கும் இந்திய அணுகல் எந்த நெருக்கடியும் இல்லாமல் சாத்தியமாகும். )
5. காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் பிரத்தியேகமான கல்வி மென்பொருளுடனான ஸ்மார்ட் அட்டைகள் மற்றும் நவீன கணனி ஆய்வு கூடங்களை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை.
6. வெளிநாட்டு சேவைக்கான சுஷ்மா ஸ்வராஜ் நிலையம் மற்றும் பண்டாரநாயக்கா சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிலையம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.
இந்திய வௌி விவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தனது இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகிய அரச தரப்பு முக்கியஸ்தர்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
2022 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார உதவிகளை வழங்கி உள்ளமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார மீட்சி செயல் முறைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என இந்திய வௌி விவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் TNA இடையில் நடந்த சமீபத்திய கலந்துரையாடல்கள் திருப்தி அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ள்து. மேலும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் மீன்பிடி பிரச்சினைகள் குறித்தும் சந்திப்புக்களில் கவனம் செலுத்தியுள்ளன. மேலும் இந்திய முதலீட்டில் சிறப்பு கவனம் செலுத்தி பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்த இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு இணக்கப்பாடுகளை நிறைவேற்றுவதாக இந்திய வெளி விவகார அமைச்சர் உறுதி அளித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர், இந்திய பெட்ரோல் நிலையம் மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான HCL டெக்னாலஜிஸ் ஆகியவற்றையும் பார்வை இட்டார். HCL ஆனது 2020 ஆம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்டது. உலகின் சில பெரிய நிறுவனங்களுக்கு உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் மையமாக மாற்றும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. HCL டெக்னாலஜிஸ் உள்நாட்டில் 1,800 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்களை உருவாக்கி உள்ளது. இலங்கையில் உள்ள பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களுடனும் இந்திய வெளி விவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கம் கலந்துரையாடினார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தின் இறுதி நிமிடத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்துள்ளார். கடந்த விஜயத்தின் போது அனைவரையும் சந்தித்த அவர் எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்கவில்லை. இந்திய வெளி விவகார அமைச்சர் ஒருவரின் இலங்கை விஜயத்தின் போது முன் எப்போதும் இல்லாத நடவடிக்கையாக இது கருதப்பட்டது. ஆனால் இம்முறை அவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்தார். எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற் கூறிய ஆறு இந்திய - இலங்கை ஒப்பந்தங்கள் பற்றி இலங்கை இந்திய விரோத தேச பக்தர்கள் என்ன சொன்னாலும், இலங்கை போன்ற ஒரு சிறிய தீவு நாட்டின் பாதுகாப்பை அண்டை நாடுகளின் அணு சக்தியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இலங்கையை மட்டும் இலங்கை பாதுகாக்க முடியாது. இல்லையெனில், 30 ஆண்டு கால உள் நாட்டுப் போரில் நாம் எப்படி நுழைந்தோம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. சிந்து வம்சாவளியைச் சேர்ந்த அனைத்து இலங்கையர்களுக்கும் இது தவிர்க்க முடியாத உண்மையாகும். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி, இலங்கையின் பாதுகாப்பு விடயங்கள் போன்றவற்றை இந்தியா கண்காணிக்க வேண்டும் என்பதே இந்த எழுத்தாளரின் கருத்து. அப்படி இருந்திருந்தால் இன்று இலங்கை இப்படி ஒரு படு குழியில் விழுந்திருக்காது.
இன்று, இந்தியா மிகவும் வளர்ந்த நாடாக உள்ளது. சில விஷயங்களில் ஐரோப்பாவையும் மிஞ்சும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் சுக போகமாக வாழ முடியாமல் கஸ்டங்களை அனுபவிக்கும் மக்கள் சிறந்த வாழ்வைத் தேடி படகு மூலம் அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிற்கு தப்பிச் சென்றவர்கள் இன்று அதிகமானோர் இந்தியாவிற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு படகு மூலம் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களுக்காக தமிழக மண்டபத்தில் ' சிலோன் அகதிகள் இல்ல முகாம் ' ஒன்று இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் உதவியே பாதுகாப்பு ..!!
---------------------------
by (2022-03-31 10:48:37)
Leave a Reply